சென்னை: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள், குழு, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து மனு கொடுத்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இடையே, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சந்திக்க மீனவப் பிரதிநிதிகள் குழு வந்துள்ளது. ஆனால், அவர்களுக்கு நாடாளுமன்ற வளாகத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்து. இதுகுறித்து தமிழக எம்.பி.க்கள் மூலம் தகவல்அறிந்த ராகுல்காந்தி,  தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்து வரவேற்புப் பகுதிக்குச் சென்று அவர்களை சந்தித்துப் பேசினார்.

தமிழக  மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், அவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடிக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஒவ்வொரு முறையும் கடிதம் எழுதி வருகிறார். ஆனால், இநத கடிதத்திற்கு மத்தியஅரசு செவிசாய்ப்பு இல்லை.

இதுதொடர்பாக மக்களவையிலும் தமிழக எம்.பி.க்கள் பேசி வருகின்றனர். இந்த நிலையில்,  தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பிக்கள்  கனிமொழி தலைமையில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் குழுவினர், நாடாளுமன்ற வளாகம் அருகே  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து சுமார் 4 மணி அளவில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையிலான குழுவினர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டப்பேரவையின் காங்கிரஸ் குழுத்தலைவர் ராஜேஸ்குமார், தமிழக எம்.பி.க்கள் ஜோதிமணி, விஜய் வசந்த் மற்றும் மீனவ பிரதிநிதிகளும் உடனிருந்தனர்.