கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை தெற்கு மன்னார் அருகே  உள்ள மண்டபம் பகுதி  மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்காள விரிகுடாவில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும், இலங்கை அரசு வாடிக்கையாக கொண்டுள்ளது.  கடலில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதுடன், அவர்கள்  எல்லை தாண்டி வந்துவிட்டதாக கூறி கைது செய்யப்படுவதும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி காரைக்கால மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்,  எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்கள் 10 பேரை தெற்கு மன்னார் அருகே கைது செய்தது. கைதான 10 மீனவர்களும் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.  விசாரணை முடிந்தபின் மன்னார் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என தகவல்கள் வெளியாக உள்ளது.