சென்னை:
கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதை அடுத்து, கடந்த 7ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி வாயிலாக நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை அதிகாரிகள், மூத்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கொரோனா நோய் பரவலின் நிலை மற்றும் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்தும், பொது போக்குவரத்தை அனுமதிக்கலாமா என்பது குறித்தும், பள்ளிகளை திறப்பதற்கான சூழல் இருக்கிறதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரும்பாலான மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.