சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டை வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார்.

தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (மார்ச்.14 ) தொடங்கியது. முதல்நாளான் நேற்று  2025-26-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு  தாக்கல் செய்தார். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள்  பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதையடுத்து, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுகுழு கூடி, பேரவை கூட்டத்தொடரை கூட்டுவது குறித்து விவாதித்தது.  அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  இந்த சட்டசபை கூட்டத் தொடர் 17-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் திங்கட்கிழமை (17-ந் தேதி)  முதல் 21-ந் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம் பெறும்.

தொடர்ந்து, 24-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், 2025-2026ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபையில் காலை 9.30 மணிக்கு வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் வேளாண்மைக்கு என்று தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வகையில், 5-வது முறையாக வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட்டில் வங்கிகளில் வேளாண்மைக்காக வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்று விவசாயிகள் ஆர்வத்துடன் உள்ளனர்.