சென்னை

சென்னை தாம்பரம் – நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் சேவை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”நாகர்கோவில்-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்.06012) ஞாயிற்றுக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து நள்ளிரவு 11.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.50 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும். பின்னர் மறுநாள் பகல் 11.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயில் வருகிற நவம்பர் மாதம் 24-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மறுமார்க்கத்தில், தாம்பரத்தில் இருந்து இந்த ரயில் (வ.எண்.06011) திங்கட்கிழமைகளில் மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.15 மணிக்கு மதுரை ரயில் நிலையம் சென்றடையும். பின்னர் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயில் வருகிற நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

இரு மார்க்கங்களிலும் இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.”

என்று கூறப்பட்டுள்ளது.