மாஸ்கோ: போதை மருந்து சர்ச்சை காரணமாக, ரஷ்ய தடகள வீரர்-வீராங்கனைகளுக்கு விதிக்கப்பட்ட சர்வதேச அடையாள தடையை விலக்குவதற்கு மறுத்துவிட்டது சுவிட்சர்லாந்து நீதிமன்றம்.

அதேசமயம், 4 ஆண்டுகள் தடைக் காலத்தை, 2 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.

ரஷ்ய தடகள வீரர்-வீராங்கனைகள், ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியதால், ஒலிம்பிக் போன்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில், அவர்கள் ரஷ்ய நாட்டுக் கொடியுடன் பங்கேற்க, 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. மேலும், அவர்கள் தங்கள் நாட்டு தேசிய கீதத்தையும் பயன்படுத்த முடியாது.

தற்போது, அந்த தடையானது 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்தாலும், அதன் காலம் 2022ம் ஆண்டு டிசம்பர் 16. எனவே, அடுத்தாண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, 2022ம் ஆண்டின் பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி மற்றும் 2022ம் ஆண்டின் கத்தார் உலகக்கோப்பை கால்பந்து ஆகியவற்றில் ரஷ்ய வீரர் – வீராங்கனைகள் தங்களது அடையாளத்துடன் கலந்துகொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ரஷ்யா நாட்டின் அதிகாரிகளும் கலந்துகொள்ள முடியாது என்பதும் கவனிக்கத்தக்கது.