டெல்லி: எச்சில் இலையில் பக்தர்கள் உருளும் வேண்டுதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அந்த தடைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்ற தடை உத்தரவு தொடரும் என குறிப்பிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், நெரூர் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சபா தரப்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்து வந்தனர். இந்த நிகழ்வு காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சில சமூக ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரிணையின்போது, இந்த நடைமுறை தொற்று நோய்களைப் பரப்பக்கூடும் என்றும், அது இழிவானது என்றும் வாதிட்ட ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகளிடமிருந்து இது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. இதையடுத்து, எச்சில் இலையில் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்யும் முறைக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது. இது அந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதனையடுத்து எச்சில் இலையில் உருளும் சடங்கை நடத்த அனுமதிக்ககோரியும், உயர்நீதிமன்ற தடை உத்தரவை நீக்கக்கோரியும், கரூர் மாவட்டத்தில் உள்ள நெரூர் மடம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் பக்ஷி அமர்வு மே.05 அன்று விசாரணை நடத்தியது.வழக்கின் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே இதே போன்ற ஒரு அங்கபிரதட்சணம் சடங்கு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு உச்சநீதிமன்றமானது தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை நாங்கள் மீற முடியாது.
இந்த வழக்கைப் பொறுத்தவரைக்கும் சென்னை உயர்நீதிமன்றம் அனைத்தையும் ஆராய்ந்தே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆகவே, அந்த தடை உத்தரவை நாங்கள் நீட்டிக்கிறோம் என்று உத்தரவிட்டனர். மேலும், இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், நிலுவையில் உள்ள நெரூர் மடம் வழக்கை கர்நாடக மாநிலம் தொடர்பான வழக்கோடு இணைத்து உத்தரவிட்டது.