சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த  உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

திமுக அமைச்சராக இருந்து வரும்,  ஐ.பெரியசாமி மீது, கடந்த  அதிமுக ஆட்சியில் 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. அப்போது,  2006 முதல் 2010 வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தில், வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான ஒரு வீட்டினை விதிகளை மீறி, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு ஒதுக்கியதாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம், ஐ. பெரியசாமியை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை மறுஆய்வு செய்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அமைச்சர் பெரியசாமியை விடுவித்த கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து,  அமைச்சர் ஐ.பெரியசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்ததார். இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது.  விசாரணையைத் தொடர்ந்து,   சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாகப் பதிலளிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.