கடந்த வாரம் செவ்வாயன்று, நாசா மற்றும் தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகத்தின் (NOAA) விஞ்ஞானிகள் சூரிய சுழற்சி 25 என அழைக்கப்படும் புதிய சூரிய சுழற்சி பற்றிய தங்கள் கணிப்புகளை அறிவித்தனர். மேலும், இது ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தனர். சூரிய சுழற்சிகள் பூமியில் உயிர் மற்றும் தொழில்நுட்பத்திற்கும், விண்வெளியில் விண்வெளி வீரர்களுக்கும் சில தாக்கங்களை ஏற்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

சூரிய சுழற்சி என்றால் என்ன?
சூரியனின் மேற்பரப்பில் எப்பொழுதும் பல்வேறு வேதி வினைகள் தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பதால், அங்கே மின்சாரம் சார்ஜ் செய்யப்பட்ட வாயுக்கள் சக்திவாய்ந்த காந்த சக்திகளின் ஓட்டத்தை உருவாக்குகின்றன, அவை காந்தப்புலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. சூரியனின் மேற்பரப்பில் உள்ள வாயுக்கள் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பதால், இந்த காந்தப்புலங்கள் மேற்பரப்பில் நீட்டிக்கப்பட்ட, விசையேற்றப்பட்ட  மற்றும் சிக்கலான இயக்கத்தை உருவாக்கலாம். இதுவே இது சூரிய செயல்பாடு என்று குறிப்பிடப்படுகிறது. சூரிய செயல்பாடு சூரிய சுழற்சியின் நிலைகளுடன் மாறுபடுகிறது. இது சராசரியாக 11 ஆண்டுகள் நீடிக்கும்.
சூரிய செயல்பாட்டை விஞ்ஞானிகள் எவ்வாறு கண்காணிக்கிறார்கள்?
சூரிய ஒளியைப் பயன்படுத்தி, சூரிய செயல்பாடுகளுடன் தொடர்புடைய சூரியனின் இருண்ட பகுதிகளைக் கொண்டு விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர். இந்த இருண்ட பகுதிகள் ஒளி, ஆற்றல் மற்றும் சூரியப் பொருள்களை விண்வெளியில் எறியக் கூடிய சூரிய பெரு வெடிப்புகளுடன் தொடர்புடையவை.

ஒரு சன்ஸ்பாட் எனப்படும் இருண்ட பகுதி என்பது சூரியனின் மேற்பரப்பில் இருட்டாகத் தோன்றும் சூரியனின் ஒரு பகுதி ஆகும். இது தோராயமாக 50,000 கி.மீ விட்டம் கொண்டவையாக இருக்கலாம். சூரியனின் காந்தப்புலம் சூரிய மண்டலத்தைத் தீங்கு விளைவிக்கும் அண்ட கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கும் ஒரு போர்வையை உருவாக்குகிறது. ஒரு சன்ஸ்பாட் 50,000 கி.மீ விட்டம் அடையும் போது, அது சூரிய வெடிப்புகளுக்கு வழிவகுக்கும் ஒரு பெரிய அளவிலான ஆற்றலை வெளியிடக்கூடும். செவ்வாயன்று, வல்லுநர்கள் சூரிய சுழற்சி 25 க்கான குறைந்தபட்ச சன்ஸ்பாட் டிசம்பர் 2019 இல் நிகழ்ந்ததாக அறிவித்தனர். சூரியனின் மாறுபாடு காரணமாக இதை பொதுவெளியில் அறிவிக்க தாமதமானது. ஜூலை 2025-க்குள் சன்ஸ்பாட் அதிகபட்ச விட்டத்தை  (சூரிய சுழற்சியின் நடுப்பகுதி) எட்டப்படும் என்றும், இந்த சூரிய சுழற்சி கடந்த சூரிய சுழற்சியைப் போலவே வலுவாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர், இது “சராசரிக்குக் குறைவான சுழற்சி” என்றாலும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஞ்ஞானிகள் சூரிய செயல்பாட்டை ஏன் கண்காணிக்கிறார்கள்?
விஞ்ஞானிகள் கருத்துப்படி, சூரிய செயல்பாடு பூமியிலும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதாலும், அதனால் பல விளைவுகள் ஏற்படலாம் என்பதாலும் இதை கண்காணிப்பது அவசியமாகிறது. எடுத்துக்காட்டாக, சூரியனில் இருந்து வெளியேற்றப்படும் மின்சாரம் ஏற்றப்பட்ட துகள்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டு, அவை பூமியை நெருங்கும்போது கடுமையான மின்னலை தூண்டலாம். மேலும், நம்முடைய மின்சார கட்டமைப்புகளில் சேதங்களை ஏற்படுத்தலாம். இது மின்சார பற்றாக்குறை மற்றும் மின் தடைகளுக்கு காரணமாகலாம். நமது சூரிய மண்டலத்தில் ஏற்படும் மிகவும் சக்திவாய்ந்த வெடிப்புகள் சூரிய எரிப்புகள் மற்றும் சிஎம்இ – க்கள் என்று நாசா குறிப்பிடுகிறது. மேலும், சூரிய  வெடிப்புகள் வானொலி தகவல்தொடர்புகள், குளோபல் பொசிஷனிங் சிஸ்டம்ஸ் (ஜிபிஎஸ்) இணைப்பு, பவர் கிரிட்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த மாதம், spaceweather.com ஒரு பெரிய சன்ஸ்பாட் – AR2770 ஐக் கண்டுபிடித்து, சில சிறிய சூரிய வெடிப்புகளை வெளியிட்டது
பழைய செய்திகளின்படி, 1967 ஆம் ஆண்டில் ஒரு அணு ஆயுத போரினை ஒத்த விளைவுகளை ஏற்படுத்தவல்ல, ஒரு பெரு வெடிப்பு ஒன்று ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.  இதன் காரணமாக, அந்த ஆண்டு மே மாதத்தில், அலாஸ்கா, கிரீன்லாந்து மற்றும் இங்கிலாந்தில் உள்ள அமெரிக்க விமானப்படையின் பாலிஸ்டிக் ஏவுகணை சிக்னல்கள், ரேடார் தளங்கள் போன்றவை கடுமையாக பாதிப்புக்கு உள்ளானது. வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பின் விஞ்ஞானிகள் அமெரிக்க தலைவர்களுக்கு சூரிய வெடிப்பு குறித்து தகவல் தெரிவித்த பின்னரே இந்த விஷயம் தீவிரமடைந்தது. சமீபத்தில், விஞ்ஞானிகள் ஒரு புதிய மாதிரியை உருவாக்கியுள்ளனர். இதன்படி, நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின் உதவியுடன் கடந்த சூரிய சுழற்சியில் இருந்து, ஒன்பதுக்கு ஏழு சூரியனின் மிகப்பெரிய வெடிப்புகளை வெற்றிகரமாக கணிக்க முடியும்.