சென்னை: தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிளானது தரமற்றது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திமுக அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியும் என தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், இந்த சைக்கிள் தரமற்று இருப்பதாக பல மாணவர்களும், பெற்றோர்களும் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதனால், இலவச சைக்கிள் குறைந்த விலைக்கு வெளியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச சைக்கிள் தரமற்ற சைக்கிள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்  குற்றம் சாட்டி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறயுள்ளார்.