புவனேஷ்வர்:

1000 கிலோ மீட்டர் தூரத்தை  துல்லியமாக தாக்கும் இந்தியாவின் ‘நிர்பய்’ ஏவுகணை சோதனை இன்று நடைபெற்றது. இதில், குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கியது சாதனை படைத்தது. இதன் காரணமாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையான டி.ஆர்.டி.ஓ. சார்பில், ராணுவ பயன்பாட்டிற்காக பல்வேறு சக்தி வாய்ந்த ஏவுகணைகளை தயாரித்து, சோதனை செய்து வருகிறது. அதன்படி தற்போது நிர்பய் பெயரில்1000 கிலோ தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட  ஏவுகணையை தயாரித்து வந்தது. இதன் சோதனை இன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

ஒடிடிசா மாநிலத்தின் பாலசோர் கடல்பகுதியில் உள்ள ஏவுதளத்தின் மூன்றாவது முனையத்தில் இருந்து இன்று  பகல் 11.44 மணிக்கு திட்டமிட்டபடி  ‘நிர்பய்’  ஏவுகணை  சுமார் 1000 கிலோ தூரத்தில் உள்ள இலக்கை நோக்கி  ஏவப்பட்டது.

இந்த ஏவுகணை சரியாக 42 நிமிடம் 23 வினாடிகள் பறந்து, நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இதை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் உறுதிபடுத்தி உள்ளனர்.

இந்த ஏவுகணையானது  விண்ணில் அதிக உயரத்தில் பறந்து தாக்குவதுடன்,  தரைமட்டத்தில் சுமார் 100 மீட்டர் உயரத்தில் பறக்கு இலக்கையும் தாக்கும் வல்லமை படைத்தது என்றும், ஏவுகணையின் வேகம், மணிக்கு சுமார் 865 கிலோமீட்டர்  என்றும் டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது