சென்னை: ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ விசாரணை கேட்டு திமுக வழக்கு தொடரும் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு இருவரும் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தேசிய அளவில் ராகுல்காந்தி, பிரியங்கா சோப்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட பலரும் இந்த விவகாரத்துக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்படும் எஸ்.ஐ இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் ஆய்வாளர் கட்டாய காத்திருப்புக்கு மாற்றப்பட்டுள்ளார். மீதமுள்ள காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் இதுவரையில் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

இந் நிலையில் இதுகுறித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதனடிப்படையில் சொன்னார்?

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா?

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]