நாகை:   வங்கக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மாவட்டத்தை சேர்ந்த  மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 12 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.


தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த நிலையில் நாகை மாவட்டத்தை சேர்ந்த 12 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 10ந்தேதி அன்று  நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த முருகையன் 12 மீனவர்கள் 3 பைபர் படகுகளில்   மீன் பிடிக்க சென்றனர். இவர்கள்  கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது  நேற்று (செப் 11ந்தேதி)  இரவு 10 மணி அளவில் எல்லைதாண்டி வந்த  அதிவிரைவு பைபர் படகில் இலங்கை கடற் கொள்ளையர்கள்  நாகை  மீனவர்களை கல் மற்றும் பைப், கயிறு கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் மீனவர்களை கத்தியை காட்டி மிரட்டி படகின் எஞ்சின், தங்க சங்கிலி, ஜிபிஎஸ் கருவி வலைகள் உள்ளிட்ட உடைமைகளை பறித்துக் சென்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் நாகை மீனவர்கள் பாலகிருஷ்ணன், இடும்பன், கணேசன், ரத்தினம் ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து இன்று அதிகாலை மீனவர்கள் உதவியுடன்  அருகே உள்ள காவல்நிலையத்தில் புகார் கூறியதுடன், காயமடைந்த நிலையில்  நாகை ஒரத்தூர் அரசுக் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் அவர்கள் கூறும்போது, தாங்கள்  இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை அதிவேக படகில் வந்து சுற்றிவளைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதாகவும், இரும்பு, கத்தி, ராடு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்து கொடூரமாக தாக்கியதுடன், தங்களது பொருட்களையும் அபகரித்து சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில  அரசுகள் உடனடியாக தலையிட்டு தாக்குதல் சம்பவத்தை தடுத்து நிறுத்தி தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பும், உரிய நிவாரணமும் வழங்க வேண்டுமென  கோரிக்கை வைத்துள்ளனர்.