சென்னை: தமிழகத்தில்ன் மீன்பிடி தடை காலம் முடிவடைந்து கடந்த சில நாட்களாகத்தான் தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள நிலையில், அவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி உள்ளது. இது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இரண்டு மாத காலம் மீன்பிடி தடை காலத்தை தாண்டி மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்துள்ளது மீனவர்களுடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள், நடுக் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து, இது தங்களது பகுதி என்று கூறி, தமிழக மீனவர்கள், அங்கிருந்து செல்ல வேண்டும் என அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீனவர்கள் வைத்திருந்த மீன்களை அள்ளிக் கொண்டு விரட்டி அடித்தனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் கரை திரும்பினர். இதுகுறித்து காவல்துறையினர் புகார் கொடுத்ததால், இலங்கை கடற்படையினரால், மீனவர்களின் படகு ஒன்றுக்கு ரூ.2 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறி உள்ளனர். இச்சம்பவம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.