கொழும்பு:

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.


இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 290 பேர் கொல்லப்பட்டனர். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா மகள் ஷேக் சோனியா, தனது கணவர் மாஷ்யூல் ஹக் சவுத்ரி மற்றும் 2 குழந்தைகளுடன் இலங்கைக்கு சுற்றுலா சென்றார்.

குண்டு வெடிப்புச் சம்பவம் நடக்கும்போது, சோனியாவின் குடும்பத்தார் சங்ரி லா ஹோட்டலில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது நிகழ்ந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் சோனியாவின் கணவர் காயமடைந்தார். ஆனால் 8 வயது மகன் ஜயான் சவுத்ரி இறந்தார்.

ஜயான் சவுத்ரியின் உடல் செவ்வாய்க் கிழமை பங்களாதேஷுக்கு கொண்டு வரப்படுவதாக பங்களாதேஷ் தொழில் அமைச்சர் நூருல் மஜீத் மஹ்மூத் ஹுமாயூன் தெரிவித்துள்ளார்.

குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த 5 பேர், இந்தியாவைச் சேர்ந்த 7 பேர்,சீனா, துருக்கியைச் சேர்ந்த தலா 2 பேர், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுக்கலைச் சேர்ந்த தலா ஒருவர் கொல்லப்பட்டனர்.