அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில்

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படிச் செல்வது?
இக்கோயில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலும் அமைந்துள்ளது.
இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?
தனது எட்டு கரங்களில் சூலம், உடுக்கை, வாள், சங்கம், கபாலம், தீ, சக்கரம், மணி, இடது காதில் தோடு, வலது காதில் குண்டலம் அணிந்து உக்கிரமான பார்வையுடன் காட்சி தருகிறாள்.
சிவனைப் போல, இடது காதில் தோடும், வலது காதில் குண்டலமும் அணிந்திருப்பது அபூர்வமான அமைப்பு. சிவமும், சக்தியும் வேரில்லை என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது.
தம்பதி சமேதராக நவகிரகங்கள் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு. கோவை நகரில் இங்கு மட்டுமே தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.
அரச மரத்தின் கீழ் பஞ்சமுக கணபதி பத்து கைகளுடன் காட்சி தருகிறார்.
அம்மனுக்கு வலப்புறத்தில் தம்பதி சமேதராக நவகிரகங்கள், பின் பகுதியில் ஆதி கோனியம்மன், பஞ்சமுக விநாயகர், வள்ளி, தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
இத்தலத்தில் வேப்பம், வில்வம், நாக லிங்கம், அரசமரம் ஆகிய தேவ மரங்கள் உள்ளன. இங்கு வேறு அம்மன் தலங்களில் இல்லாத சிறப்பாக ஆடியில் 30 நாளும் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
மாசியில் 14 நாள் திருவிழா கொண்டாடப்படுகின்றது.
அமாவாசை, பௌர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
தமிழ் மாதப்பிறப்பு, ஆடி வெள்ளி, தை வெள்ளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, தனுர்மாத பூஜை, தைப்பொங்கல், தீபாவளி போன்ற நாட்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றது.
இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றது?
இத்தலத்தில் வேண்டிக் கொண்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தைப்பேறு கிட்டும், நோய்கள் நீங்கும், தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?
சுவாமிக்கு வஸ்திரங்கள் சாற்றி, சிறப்பு அபிஷேகம், அன்னதானம் செய்யலாம்.
துர்க்கைக்குப் பொட்டுத்தாலி செலுத்தி எலுமிச்சை தீபம் ஏற்றலாம்.
மாவிளக்கு, பொங்கல் நேர்ச்சை போன்ற நேர்த்திக்கடன்களும் செய்கின்றனர்.
Patrikai.com official YouTube Channel