உயிர் எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது?

 

அ. குமரேசன்

 

ஆன்மீகத்தின் அடிப்படையே ஆன்மாதான் என்று ஆன்மீகவாதிகள் கூறுகிறார்கள். ஆன்மாவை நல்வழிப்படுத்துவது, தறிகெட்டு அலையும் ஆன்மாவை நெறிப்படுத்துவது, மனிதாத்மாவைப் பரமாத்மாவுடன் ஒருங்கிணைப்பது… இத்தகைய பல விளக்கங்கள் ஆன்மீகத்திற்கு அளிக்கப்படுகின்றன. ஆகவே ஆன்மா என்றால் என்ன, அப்படியொன்று இருக்கிறதா, மனித உடலில் அது எங்கே இருக்கிறது என்ற வினாக்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. ஆன்மாவின் வேலை என்ன, அது எப்படி வந்தது, எப்படிப் போகிறது, எங்கிருந்து வந்தது, எங்கே போய்ச் சேர்கிறது என்ற வினாக்களும் இணைகின்றன.

ஆன்மா பற்றிய நம்பிக்கைதான் ஆத்திகத்தின் ஊற்று என்றும் சொல்லப்படுகிறது. அதை மறுப்பது நாத்திகம் எனப்படுகிறது. அதாவது ஆத்திகம்தான் முதலில் உருவானது, அதை மறுத்துப் பிற்காலத்தில் உருவானதுதான் நாத்திகம் என்ற பொருள்பட இவ்வாறு சொல்லப்படுகிறது. ஆனால், மனிதர்களின் ஆதித் தாத்திகளும் தாத்தன்களும் ஆத்மா பற்றியோ ஆத்திகம் பற்றியோ அலட்டிக்கொள்ளாமல்தான் இருந்தார்கள். மழை பொழிந்தால் மகிழ்ந்தார்கள். பெருமழையாகிவிட்டால் பயந்தார்கள். வெயிலடித்தால் விளையாடினார்கள். கொடுங்கோடை வெயிலென்றால் வறண்டு வதங்கினார்கள். இப்படி இதமளித்த இயற்கை நிகழ்வுகளை வரவேற்றும், இடையூறு செய்த இயற்கை நிகழ்வுகளை வரவேற்றும் வாழத் தொடங்கிய மனித இனத்தில், நெடுங்காலம் கழித்துதான் அந்த இயற்கை மாறுதல்களுக்குக் காரணம் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி என்ற கருத்து உருவானது.

 

அறிவின் அன்றைய துளிர்ப்பருவத்தில், விடை காண முடியாமலிருந்த பல கேள்விகளுக்கு இந்தக் கருத்து ஒரு வசதியான பதிலாக இருந்தது. மேற்கொண்டு கேள்விகள் கேட்பதையும், விடைகளைத் தேடுவதையும் தடுத்து முடக்கியது அந்தக் கருத்து. அதைச் சார்ந்து பிற கற்பனைகளும், அந்தக் கற்பனைகளின் அடிப்படையில் கதைகளும், அந்தக் கதைகளைச் சார்ந்து வழிபாடுகளும், வழிபாடுகளை மையமாகக் கொண்ட சமயங்களும் கட்டமைக்கப்பட்டன.

நான் “ஆத்திகம் எதிர் நாத்திகம்” என்று  சொல்வதில்லை. “நாத்திகம் எதிர் அநாத்திகம்” என்றே சொல்லி வருகிறேன்.

 

ஆன்மா என்றால் உயிர் என்றொரு விளக்கம் தரப்படுகிறது. உயிரும் ஆன்மாவும் ஒன்றல்ல, உயிர் என்பது உடல் சம்பந்தப்பட்டது, ஆன்மாவோ உடலைக் கடந்த தன்னுணர்வு சம்பந்தப்பட்டது என்றொரு விளக்கமும் தரப்படுகிறது. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற விசைதான் ஆன்மா, அது உடலுக்குள் வந்து செல்வதற்கான ஊடகம்தான் உயிர் என்ற விளக்கமும் இருக்கிறது. ஒரு வகையான் கருத்து மயக்கத்தையும் மன நிறைவையும் அளிக்கிற இத்தகைய விளக்கங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.

 

உயிர் என்று தனியாக ஏதுமில்லை. மனித உடலில் உயிர் என தனிச்செயல்பாடு எதுவும் இல்லை. மனிதர்கள் மட்டுமல்லாமல் எந்த உயிரினமானாலும் அதன் உடலில் உயிர் என்று தனியாக இல்லை. அந்த உயிர் இருக்கிற தனி அங்கமும் இல்லை.

அனுபவமாய் உணர்ந்து அறிவாய்ப் புரிந்து சிந்திக்கும் பணியைச் செய்கிறது மூளை. கரிம ரத்தத்தை வாங்கி, நுரையீரலுக்கு அனுப்பி,  அங்கிருந்து உயிர்ம வாயு கலந்து திரும்பி வரும் ரத்தத்தை உடல் முழுக்க ஏறக்குறைய 97,000 கி.மீ. தொலைவு நீளமான ரத்தக் குழாய்களில் தள்ளிவிடுகிற வேலையைச் செய்கிறது இதயம். அந்த ரத்தத்தில் கலந்த கரிமத்தை மூச்சை வெளியேற்றுவதன் மூலம் அப்புறப்படுத்தி, மூச்சை உள்வாங்குதன் மூலம் கிடைத்த உயிர்ம வாயுவை ரத்தத்தில் கலந்து இதயத்திற்கு அனுப்புவது நுரையீரலின் வேலை. பார்ப்பது கண்ணின் வேலை. கேட்பது செவியின் வேலை. சுவையறிவதோடு மூளை நினைக்கிறபடி அசைந்து சொற்களைப் பேசுவது நாவின் வேலை…

 

இப்படியாக உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும் தனித்தனியே வேலை இருக்கிறது. அப்படி உயிர் என்ற அங்கமும் இல்லை, உயிரை வைத்திருக்கிற அங்கமும் இல்லை.

 

ஒருவர் இறக்கிறார் என்றால் அவரது உடலை விட்டு உயிர் போய்விட்டது என்று பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், உயிர் எங்கே போகிறது? எங்கேயும் போகவில்லை! ஏனென்றால் அது எங்கேயிருந்தும் வரவில்லை!

 

பேருந்துகளை நிறுத்தி வைத்து ஒவ்வொரு ஊருக்கும் அனுப்பி வைக்கிற, திரும்பி வரும் வண்டிகளை உள்ளே நிறுத்திவைக்கிற பேருந்து நிலையம் போல, உயிர்களை நிறுத்திவைத்து உடல்களுக்கு அனுப்பி வைக்கிற, திரும்பி வரும் உயிர்களை உள்ளே இருப்பில் வைக்கிற உயிர் நிலையம் இல்லை.

உயிர் என்பது பொருளல்ல, அதைக் கண்ணால் பார்க்க முடியாது, மின்சாரம் போல அதை உணரத்தான் முடியும் என்பார்கள். ஆனால், மின்சாரத்தை இணைப்புகளுக்குச் செலுத்துகிற மின்மாற்றி போல, உயிரை உடல்களுக்குச் செலுத்துகிற உயிர்மாற்றியும் இல்லை.

 

கல்லூரி நாட்களில் ஒரு விரிவுரையாளர், தான் படித்த இப்படியொரு ஆராய்ச்சி பற்றிய செய்தியைச் சொன்னார்: உயிர் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் குழு ஒன்று ஈடுபட்டது. அவர்கள் உயிருடன் இருந்த ஒரு குரங்கை, முற்றிலும் ஒரே வார்ப்பாகச் செய்யப்பட்டிருந்த ஒரு கண்ணாடிக் கூண்டில் வைத்து அடைத்தார்கள். பின்னர் அந்தக் கூண்டின் வாய்ப்பகுதியையும் கண்ணாடியாலேயே மூடினார்கள். துளியளவுக் காற்று கூட உள்ளே நுழையவோ வெளியே வரவோ முடியாதபடி அந்தக் கண்ணாடிக் கூண்டு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. விஞ்ஞானிகள் குழு சுற்றி நின்று உற்றுக் கவனிக்க, சிறிது நேரத்தில் கண்ணாடியில் ஒரு மயிரிழைக் கோடாக விரிசல் ஏற்பட்டது. உள்ளே அந்தக் குரங்கு செத்துப் போயிருந்தது. உடலை விட்டு உயிர் பிரிந்து எங்கேயோ போகிறது என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டது.

 

கல்லூரியை விட்டு வெளியே வந்து சில பல ஆண்டுகள் கடந்த பிறகுதான் நான் உண்மையான அறிவியலைப் படிக்கத் தொடங்கினேன். அது வரையில் இந்தப் பரிசோதனை பற்றிய விரிவுரையாளரின் தகவல் உண்மைதான் என்றே நம்பி வந்தேன். உயிர் பற்றிய விவாதங்களில் இதை நானும் சான்றாகக் கூறி வந்தேன். அறிவியல் பற்றிய புரிதல்கள் ஏற்பட்ட பிறகு, அந்தத் தகவலுக்கு ஆதாரம் எதுவும் இல்லை, எந்த நாட்டிலும் எந்த அறிவியலாளர் குழுவும் இப்படியொரு சோதனையை நடத்தியதற்கான ஆவணப் பூர்வ சான்று எதுவும் இல்லை என்பதை அறிந்தேன்.

 

விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் தெரியவந்ததாகக் கட்டிவிட்டு இப்படிப்பட்ட அறிவியலுக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவது அவ்வப்போது நடந்து வருவதுதான். சில ஆண்டுகளுக்கு முன்னால் கூட, விண்வெளியில் பூமியைச் சுற்றி வருகிற செயற்கைக் கோள்கள் அவற்றின் சுற்றுப்பாதையில் தமிழகத்தின் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு நேர் மேலாக வருகிறபோது செயலிழந்து விடுவதாகவும், சனீஸ்வரரின் ஆற்றலால் அப்படி நடப்பதாகவும், கோபுரத்தைத் தாண்டிய பிறகுதான் மறுபடி இயங்கத் தொடங்குவதாகவும் கிளப்பிவிடப்பட்டது. நாஸா விஞ்ஞானிகள் இதைக் கண்டுடித்திருக்கிறார்கள் என்று சொன்னதோடு, அதற்கான ஆதாரம் என்று நாஸா அறிக்கை ஒன்றையும் இணைத்திருந்தார்கள் இதைக் கிளப்பிவிட்டவர்கள். நாஸா நிறுவனமே அந்தத் தகவலில் உண்மையில்லை என்றும், அது போலியாகத் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் அறிவித்துவிட்ட பிறகும் கூட, இப்போதும் அதை நம்புகிறவர்கள் இருக்கிறார்கள்!

 

நாடு முழுக்க சில நாட்களுக்குப் பால் விற்பனையை எகிறவைத்த பிள்ளையார் சிலை பால் குடிக்கிறது என்ற கட்டுக்கதையை மறக்க முடியுமா? அதையாவது, பரப்பு இழுவிசை என்ற இயற்கை விதியைப் புரிந்துகொள்ளாத ஒரு பாமரத்தனம் இருந்ததாக எடுத்துக்கொண்டு சிரிப்போடும், அத்தனை கோடி மக்கள் ஏமாளியாக்கப்பட்டார்களே என்ற கவலையோடும் விட்டுவிடலாம். ஆனால், செயற்கைக்கோள் செயலிழக்கும் கதையோ திட்டமிட்ட, அறிவியல் ஆவணத்தையும் பயன்படுத்திக்கொண்ட, ஒரு பெரிய மோசடி. ஆன்மீகமே தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்கிற அறியாமைதான், இதுவோ மற்றவர்களையும் ஏமாற்றுவதற்காகப் புனையப்பட்ட சூழ்ச்சி. இப்படிப்பட்ட புனைவுகளாலும் மோசடி வேலைகளாலும்தான் ஆன்மீகத்தை நிறுவ வேண்டியிருக்கிறது என்பதிலேயே அதன் போலித்தனம் அம்பலமாகிறது (போலித்தனம் என்றால் கோபித்துக்கொள்வார்கள், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பொய் என்று சொல்லக்கூடாது என்பது போல. ஆகவே அங்கே ‘உண்மைக்குப் புறம்பான தகவல்’ என்று நாகரிகமாகச் சொல்வது போல இதையும் போலித்தனம் என்று சொல்லாமல், உண்மையிலாத்தனம் என்று சொல்லி வைப்போம்).

 

இப்படியான வம்புகளுக்குப் போகாத ஆன்மீகவாதிகளும் ஆன்மீக நம்பிக்கையாளர்களும் இருக்கிறார்கள். அவர்கள் “ஆன்மீகம் என்பது விஞ்ஞான சோதனைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது” என்று சொல்லி நழுவிவிடுவார்கள். இவர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒரு வகையினர், ஆன்மீகத்தை மறுப்பவர்களோடு விவாதித்துகொண்டிருக்க முடியாது என்றோ, விவாதிக்கத் தேவையில்லை என்றோ, வயதானால் அவர்களாகப் புரிந்துகொண்டு மாறுவார்கள் என்றோ நினைத்துச் தங்களுடைய நம்பிக்கையோடு நிற்பவர்கள். இன்னொரு வகையினரோ, ஆன்மீகத்தை மறுப்பவர்களைச் சும்மா விட்டால் உலகத்தைக் கெடுத்துவிடுவார்கள் என்று வசவார்ச்சனை செய்கிறவர்கள்.

 

சரி, உயிர் பற்றிய விவாதத்திற்கு வருவோம். உடலில் உயிர் என்று தனியாக எதுவும் இல்லை. அது தனித்து இயங்குகிற விசை அல்ல. உடலின் இயக்கம்தான் உயிர். கைகளும் கால்களும் அசைவது, கண்களின் ஆடிகள் வழியே திரையில் பதிவாகும் படிமங்களை மூளை காட்சியாகப் பார்ப்பது, செவிச்சவ்வுகளில் மோதி நரம்புகள் வழியே வரும் அதிர்வுகளை மூளை ஒலியாய்க் கேட்பது,  ரத்தம் ஓடுவது, உணர்வுகள் பதிவாவது, நுரையீரல் சுவாசிப்பது, சிறுநீரகம் தன் பங்கிற்கு ரத்தத்தைச் சுத்தப்படுத்துவது, இரைப்பை உணவை அரைப்பது, அப்படி அரைத்த உணவைச் சிறுகுடல் நகர்த்திச் சென்று சத்துகளை எடுத்துக்கொள்வது, சக்கை உணவைப் பெருங்குடல் பெற்றுக்கொண்டு வெளியேற்றுவது, பெண்ணுடலில் கருமுட்டைகளும் ஆணுடலில் விந்தணுக்களும் உற்பத்தியாவது, அவற்றின் இணைவுக்காகப் பாலின உறுப்புகள் பாலியல் உணர்வூட்டம் பெறுவது, அந்த இணைவில் கரு உருவாவது, அந்தக் கரு வளர வளர இத்தகைய அங்கங்கள் முளைப்பது, இப்படியாக புவிக்கு வந்த புதிய குழந்தையின் உடலில் மேற்படி அங்கங்கள் மேற்படி பணிகளைச் செய்வது… இந்தச் செயல்பாடுகள்தான் உயிர். சிலரது உடலில் விந்தணுவும் கருமுட்டையும் உருவாகாமல் போவது, சிலரது உடலில் பிறப்பின்போது இருந்த பாலின அடையாளங்கள் மாறுவது – இவையும் கூட உயிர்ச் செயல்பாடுகள்தான். மனித உடலில் மட்டுமல்லாமல் தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்டவற்றுக்கும் இதுபோன்ற செயல்பாடுகள் இருக்கின்றன.

 

இந்தச் செயல்பாடுகள் முற்றிலுமாக நின்றுபோகிற கட்டத்திற்கு நாம் வைத்துள்ள பெயர்கள்தான் மரணம், சாவு, செத்துப்போவது, காலமாவது, மண்டையைப் போடுவது, போய்ச்சேர்வது… இவையெல்லாம். உடலின் பிற அங்கங்கள் செயல்படுவதை நிறுத்திக்கொள்கிறபோது அந்த அளவில் உடல் முடங்குகிறது. இதயத்தின் செயல்பாடு முடிவுக்கு வருகிறபோது மொத்த உடலும் மரணத்தைத் தழுவுகிறது.

 

ஆக, உயிர் எங்கேயிருந்தும் வரவில்லை, அங்கேயே போவதற்கு. அப்படியானால் அந்தக் கரு எப்படி வளரத் தொடங்குகிறது? அதிலே உயிர் புகுவதால்தானே என்று, இது பற்றிய உரையாடல்களின்போது நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். உயிர் புகுவதால் கரு வளரவில்லை, கரு வளர்வதுதான் உயிர் என்பதே இதற்கான பதில். எங்கிருந்தோ வந்து கருவில் நுழைகிற உயிர்,  முழுமையாக வளர்ந்த, ஏதோ காரணத்தால் மரணமடைந்த உடலுக்குள் மறுபடி நுழைவதில்லையே என்ற சிந்தனைக்கான மாற்றுக் கேள்வியையும் இதற்கான பதிலாகக் கூறலாம்.

 

இன்னமும் உரையாடலாம்.