சென்னை: தமிழ்நாட்டில் 65 மெயில், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு செய்து, ரயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. இந்த புதிய மாற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது.
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை வெளியாகி உள்ளது. அதன்படி, வரும் 1ந்தேதி (ஜனவரி 1) முதல் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது மேலும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மெமு ரயில் உட்பட 28 ரயில்களின் எண்கள் ஜன.1 முதல் மாற்றப்பட உள்ளன. 102 ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம் தற்காலிக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. கொல்லம் – தாம்பரம், நாகர்கோவில் – தாம்பரம், செங்கோட்டை – சென்னை எழும்பூர், எழும்பூர் – குருவாயூர், எழும்பூர் – மங்களூர் சென்ட்ரல், எழும்பூர் – ராமேசுவரம், எழும்பூர் – செங்கோட்டை தினசரி ரயில்கள் உட்பட 65 மெயில், விரைவு, அதிவேக ரயில்களின் வேகம் ஜன.1-ம் தேதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் 5 நிமிடம் முதல் 85 நிமிடங்கள் வரை சேமிக்கப்படும்.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ரெயில்வேக்கான புதிய கால அட்டவணை வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. இதில் மெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. புதிய பயணிகள் ரெயில், ரெயில் சேவை நீட்டிப்பு, புதிய நிறுத்தங்கள், ரெயிலின் வேகம் அதிகரிப்பு, கூடுதல் பெட்டிகள் இணைப்பு உள்ளிட்ட மாற்றங்கள் அடங்கிய புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, நடப்பாண்டில் 8 புதிய ரெயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 4 ரெயில்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 ரெயில்கள் மாற்று நேரத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 44 எக்ஸ்பிரஸ், பயணிகள் ரெயில் எண்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 102 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. 22 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 வந்தே பாரத் ரெயில்களில் கூடுதாலாக 40 பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. 46 எக்ஸ்பிரஸ் ரெயில், 27 பயணிகள் ரெயில்களில் 62 பெட்டிகள் நிரந்தரமாக இணைக்கப்பட்டுள்ளது.
இதேபோல, வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் 65 மெயில், எக்ஸ்பிரஸ் மற்றும் அதிவிரைவு ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. மேலும், 14 பயணிகள் ரெயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட உள்ளது. அதன்படி, 5 நிமிடங்கள் முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் சேமிக்க முடியும்.
குறிப்பாக, செங்கோட்டை- சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12662) வழக்கமான நேரத்தைவிட 20 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர்-குருவாயூர் (16127) 20 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்படவுள்ளது. கொல்லம்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16102) 85 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும், கோவை-ராமேசுவரம் ரெயில் (16618) 55 நிமிடம் முன்னதாக செல்லும் வகையிலும் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
நாகர்கோவில்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (20692) 45 நிமிடம் முன்னதாகவும், தூத்துக்குடி-சென்னை எழும்பூர் (12694) முத்துநகர் எக்ஸ்பிரஸ் 30 நிமிடம் முன்னதாகவும், சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் 10 நிமிடம் முன்னதாகவும் சென்றடையும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட உள்ளது.
இதேபோல, நெல்லை-செங்கோட்டை பயணிகள் ரெயில் 35 நிமிடம் முன்னதாகவும், மதுரை-ராமேசுவரம் பயணிகள் ரெயில் 15 நிமிடம் முன்னதாகவும் செல்லும் வகையில் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகளின் பயண நேரம் சேமிக்க முடியும். திருப்பதி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2-ந்தேதி முதல் போலூர் வரையிலும், ராமேசுவரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 1-ந்தேதி முதல் போலூர் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்-நாகர்கோவில் அந்தியோதியா ரெயில், நாகர்கோவில்-தாம்பரம் அந்தியோதியா எக்ஸ்பிரஸ் ரெயில் சீர்காழி ரெயில் நிலையத்தில் வரை விரிவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]