சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு. நோய் பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கும் வகையில், அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள மாந்தோப்பு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் சைதை மேற்கு பகுதி 140 வது வார்டில் கோடம்பாக்கம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி அம்மா பூங்கா ரூபாய் 3 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டிலான புனரமைக்கும் பணியினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்பிரமணியன் “சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி அம்மா பூங்கா ரூ.3 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது என்றார். பூங்காவில் புதிய நுழைவு வாயில், கழிவறைகள், முதியோர்களுக்கான சிறப்பு வழிதடம், குழந்தைகள் விளையாடும் இடம், என பல்வேறு சிறப்பம்சங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் மூன்று மாதங்களில் முழுமையாக நிறைவு பெறும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு, அதனால் உருவாகும் நோய்களின் பாதுகாப்பில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்” அமைக்கப்பட்டுள்ளது. வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் , நிகழ்ச்சி வாயிலாகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு கூறினார்.