இஸ்லாமாபாத்:

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளதை கடுமைய விமர்சித்துள்ள பாகிஸ்தான்,  இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370- வது சட்டப்பிரிவு மற்றும் 35ஏ சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுவதற்கான மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்  தாக்கல் செய்தார். இதையடுத்து கடும் அமளிகள் நடைபெற்று வரும் நிலையில்  மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த மசோதாவுக்கு  பிஜூ ஜனதா தளம், அதிமுக, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்குதேசம் உள்பட பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காஷ்மீர், கம்யூனிஸ்டு, திமுக உள்பட சில கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

முன்னதாக காஷ்மீரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் காஷ்மீர் முதல்வர்கள் அனைவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு, அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக் கப்பட்டு உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தைக்கொண்டே இந்தியா மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தான், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக ஐ.நா. அமைப்பும் தலையிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஆனால், இந்தியா காஷ்மீர் பிரச்சினையில் அண்டை நாடுகள் தலையிட விரும்பாத நிலையில், ஜம்மு – காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார்.

அதன்படி,  ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார்.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தின்படி சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு தன்னிச்சை யான முடிவு எதையும் எடுக்க முடியாது. இப்போது எடுக்கப்பட்டுள்ள முடிவு காஷ்மீர் மக்களின் ஒப்புதலைப் பெற்றோ. பாகிஸ்தானின் ஒப்புதலைப் பெற்றோ மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இது சட்ட விரோதமானது. தொடர்ந்து இந்தப் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்பும்” என்றும்,  பாகிஸ்தான் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.