சென்னை: விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஜூலை 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் அதிக அளவு மக்கள் பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் 4 ஆம் தேதி 325 பேருந்துகளும், 5ஆம் தேதி 375 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 4 ஆம் தேதி 55 பேருந்துகளும் 5 ஆம் தேதி சனிக்கிழமை 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாதாவரத்திலிருந்து 4 ஆம் தேதி, 5ஆம் தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 8327 பயணிகளும், சனிக்கிழமை 5052 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 8148 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தொலைதூர பயணம் மேற்கொள்ள உள்ள பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]