கேனரி தீவுகளுக்கு அருகே கால்நடைகளை ஏற்றிவந்த கப்பலை பரிசோதனை செய்த ஸ்பெயின் காவல்துறையினர் அடுக்கடுக்கான பெட்டிகளில் 4.5 டன் கோகைன் எனும் போதைப் பொருளைக் கைப்பற்றினர்.

இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ. 900 கோடி ($114 மில்லியன்) என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக இன்று வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொலம்பியாவிலிருந்து டோகோ கொடியிடப்பட்ட ஓரியன் V கப்பல் 10 க்கும் மேற்பட்ட நாடுகள் வழியாக பயணம் செய்து செவ்வாய்க்கிழமை அன்று கிரான் கனாரியா தீவில் உள்ள லாஸ் பால்மாஸில் துறைமுகப் பகுதிக்கு வந்தது.

இந்தக் கப்பலை சோதனையிட்ட காவல்துறையினர் இதிலிருந்து போதைப் பொருளைப் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் 28 கப்பல் பணியாளர்களை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோத சரக்குகளை கண்டுபிடிப்பது மிகவும் கடினம் என்பதால் கால்நடைக் கப்பல்களை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சமீப காலமாக அதிகளவு பயன்படுத்தி வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லத்தீன் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு போதைப் பொருளைக் கொண்டுவரும் சர்வதேச மாஃபியா கும்பல் தங்கள் உத்திகளை அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன. தற்போது கால்நடை கப்பல்களை பயன்படுத்தி வருவது சோதனை செய்வதில் காவல்துறைக்கு மிகவும் சவாலாக அமைந்துள்ளது என்று ஸ்பெயின் காவல்துறை தெரிவித்துள்ளது.