சென்னை: ‘என் படத்தை ரிலீஸ் பண்ண விடமாட்றாங்க’ – தியேட்டர் அதிபர்களை மிரட்டுறாங்க’.. என நடிகர் ரஞ்சித் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் இன்று வெளியாக இருந்த நிலையில், அந்த படத்தை திரையிடக்கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியான நிலையில், தற்போது படத்தை வெளியிட சில அமைப்புகள், ஆளும் கட்சி விநியோக நிறுவனத்தின் ஆதரவுடன் மிரட்டல் விடுப்பதாக நடிகர் ரஞ்சித் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த நடிகர், “இன்று திரைக்கு வர இருந்த கவுண்டம்பாளையம் படம் திரையிடப்படாது. இந்தப் படம் திரையிடுவது ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றவர், இது தொடர்பாக முதல்வரையும், செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன்.
நாடக காதலை பற்றியும், பெற்றோர்களின் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பு வருகிறது. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துக்கள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றி தான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில். சென்சார் சான்றிதழ் வாங்கியும் இப்படத்தை என்னால் வெளியிட முடியவில்லை.
எனது படம் வெளியிட கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருக்கின்றனர் என தியேட்டர் உரிமையாளர்கள் சொல்லும் போது வருத்தமாக இருக்கிறது. ஆனால், யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன்.
இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும் கடவுள் பார்த்துக் கொள்வார். நான் நேர்மையாகவும், உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன். இந்த படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகின்றனர்.
திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம். ஒரு நாடக காதலை பற்றியும், ஒரு நல்ல குடும்பக் கதையையும் நான் திரைப்படமாக எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கின்றனர்” இந்த படம் இன்று வெளியிடப்படாது என்பதை வருத்தோடு தெரிவித்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]