சீனாவை ஆட்கொண்டுள்ள கோரோனா வைரஸ் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் அரசு தமிழ் உள்பட 4 மொழிகளில் அறிவிப்பு வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

கோரோனா வைரஸ் சீனாவில் உள்ள வுகான் மாகாணத்தின் மாமிச உணவுப்பொருள் சந்தையில் விற்கப்பட்ட பாம்பு உணவில் இருந்து பரவியதாக கூறப்படுகிறது.  தற்போது வுகான் உள்பட சில மாவட்டங்களில் கோரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1970 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று இந்தியா உள்பட பல நாடுகளுக்கு பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, அதற்கான முன்னேற்பாடுகளை உலக சுகாதார நிறுவனம் உள்பட பல நாடுகள் எடுத்து வருகின்றன

இந்த நிலையில், சிங்கப்பூர் நாட்டின் சுகாதாரத்துறை தமிழ், ஆங்கிலம் உள்பட 4 மொழிகளில் விளம்பரம் செய்து  சீனாவின் வுகான் வைரஸ் தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது