டெல்லி:  நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருவதால், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன், வெண்டிலேட்டர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, ஸ்பெயின் நாடு 141 வெண்டிலேட்டர்களை தனி விமானத்தில் இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. எகிப்து நாடும் 3 விமானங்களில்  மருந்து பொருட்கள், உபகரணங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவை இந்தியா வந்தடைந்தது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.  அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி உதவி செய்கின்றன.

அந்த வகையில் ஸ்பெயின் நாடும் இந்தியாவுக்கு உதவி வருகிறது.  அங்கிருந்து  விமானம் மூலமாக 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 141 வெண்டிலேட்டர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தாம் பக்‌ஷி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில்  இருந்து கிடைத்துள்ள நட்பு ரீதியான உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது என புகழாரம் சூட்டியுள்ளார்.

அதுபோல எகிப்தில் இருந்து 3 விமானங்களில் இந்தியாவிற்கு மருத்துவ உபகரணங்கள்  இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எகிப்து நாட்டில் இருந்து 8,000 ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள், 300 ஆக்சிஜன் சிலிண்டர்கள், 50 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மற்றும் 20 வெண்டிலேட்டர்கள் ஆகியவை 3 விமானங்களில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றான எகிப்தில் இருந்து வந்துள்ள இந்த உதவி மிகவும் மதிப்பு வாய்ந்தது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.