சேலம்: தமிழ்நாட்டில்  மாணவிகள் மீதான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆய்வக தொழில்நுட்புநர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்ய வேண்டும் என மாணவ மாணவிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டிற்கு பெருமையை சேர்த்து வரும்  சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், அங்கு படித்து வரும் மாணவி ஒருவர் சரித்திர பதிவேடு குற்றவாளி ஒருவரால், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்,  சேலம் இரும்பாலை சாலையில் உள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் ஆய்வக தொழில்நுட்புநராக வேலு (57) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கல்லூரி மாணவிகள், டீன் தேவி மீனாளிடம் புகார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ள டீன் தேவி மீனாள், விசாகா கமிட்டி அமைத்து மருத்துவ மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும், ஆய்வக தொழில்நுட்புநர் வேலுவிடம் நடத்திய விசாரணையில், வாட்ஸ்-அப் மூலம் ஆபாச குறுந்தகவல்களை மாணவிகளுக்கு அனுப்பியதை ஒப்புக் கொண்டார்.

இது குறித்த விசாரணை அறிக்கையை சென்னை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து மருத்துவக் கல்வி இயக்குநர் உத்தரவின் பேரில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி டீன் தேவி மீனாள், ஆய்வக தொழில் நுட்புநர் வேலுவை தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இது குறித்து டீன் தேவி மீனாள் கூறும்போது, மாணவிகள் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்யப்பட்டு அரசுக்கு விசாகா கமிட்டியின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வேலு தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருகிறது, என்றார்.

இந்த சம்பவத்தில்  ஆய்வக தொழில் நுட்புநர் வேலுவை போக்சோ சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ மாணவிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.