செனனை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சேட்டை கொடுத்த புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு, போலீஸ் காவலில் உள்ள சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர்  சிவசங்கர் பாபா மீது முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின்பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்து,அவரை கைது செய்தது.  செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து,  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார். பின்னர் சென்னையில் உள்ள  புழல் சிறையில்  அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று சிபிசிஐடி போலீசார் சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். அதில், 3நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார் இதையடுத்து போலீசார் அவரை எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று இரவு முழுவதுமும், விடிய விடிய சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியதாகவும், இன்று இரண்டாவது விசாரணை நடைபெற்று வருவதாகவும்கூறப்படுகிறது. தொடர்ந்து, அவரது பள்ளிக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.