சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை வருகின்ற 23-ம் தேதிக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வந்த சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், மாவட்டத்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது, மரியாதை நிமித்தமாக சந்திக்கச் சென்ற பெண் எஸ்.பியை காரில் ஏறச்சொல்லி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சஸ்பெண்டு செய்யப்பட்ட அவர்மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கு கடந்த 9-ம் (ஆகஸ்டு) தேதி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் மன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி, எஸ்.பி. கண்ணன் ஆகியோர் ஆஜராகினர். அவர்களுக்கு நடுவர் மன்றம் குற்றப்பத்திரிகை நகல் வழங்கி வழக்கை 16ந்தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் டிஜிபி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரயில், பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தொடர்ச்சியான உத்தரவுகள், நியாயமான விசாரணைக்கான வாய்ப்புகளைத் தப்பெண்ணப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, சிறப்பு டிஜிபி சார்பில், தன்மீதான வழக்கை ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கோ அல்லது தமிழகத்துக்கு வெளியே உள்ள வேறு எந்த திறமையான நீதிமன்றத்துகும் மாற்றும்படி கோரியிருந்தார். இதற்கு தமிழக அரசு வழக்கறிஞர்கள் அவகாசம் கோரியத்தைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை 18-ம் தேதிக்கு உச்சநீதி மன்றம் ஒத்திவைத்தது.
இந்த விவரத்தை இன்று விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார். இதற்கிடையே, சிறப்பு டிஜிபி மற்றும் எஸ்.பி. ஆகியோர் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இதையடுத்து வழக்கை வருகின்ற 23-ம் தேதிக்குஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.