நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவது தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த வரும் உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள், தாமிர பரணி ஆற்றுப்படுகையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர், நீதிமன்ற உத்தரவை மீறி, தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, நதியில் கழிவுநீர் கலப்பதை தடுப்பது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கை குறித்து நேரில் ஆய்வு செய்யப்போவதாக தெரிவித்தனர். அதன்படி நேற்று பல இடங்களில் நேரடி ஆய்வு செய்தனர்.

தாமிரபரணி ஆறு நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 130 கிலோ மீட்டர் தூரம் ஓடி வயல் வெளிகளை செழிப்படைய செய்து விட்டு புன்னக்காயல் கடலில் கலக்கிறது. மேலும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. இந்த ஆற்றில் நகர்ப்புறங்களில் பல்வேறு இடங்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது. இதனால் ஆறு மாசுபட்டு கூவம் நதி போல் மாறி வருகிறது.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி  அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, 2024  மார்ச் மாதம் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது.

இதையடுத்து அடுத்து நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இதையடுத்து, இந்தவழக்கு கடந்த வாரம்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அன்றைய விசாரணையின் போது நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா ஆஜராகி, பாதாள சாக்கடை திட்டம் முடிவடையும்போது தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து,  நீதிபதிகள் தாங்களே நேரில் வந்து தாமிரபரணி ஆற்றை பார்வையிடுவதாக கூறினார்கள். அதன்படி நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் நேற்று (நவம்பர் 10ந்தேதி)  நெல்லைக்கு வந்தனர்.

நெல்லை வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், ஆணையாளர் சுகபுத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் நீதிபதிகளை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகே தாமிரபரணி ஆற்றுக்கு கழிவுநீர் செல்லும் ஓடை மற்றும் மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் ராமையன்பட்டியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தையும் பார்வையிட்டனர். அங்கு மாநகரில் சேகரித்து கொண்டு வரப்படும் கழிவுநீர், சுத்திகரித்து வெளி யேற்றப்படும் தண்ணீர் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

ஆய்வின் போது நீதிபதிகள், மாநகராட்சி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள். அதாவது, மாநகராட்சி சார்பில் செய்யப்பட்டிருந்த தற்காலிக ஏற்பாடுகளை நீதிபதிகள் பார்த்து,

யாரை ஏமாற்றுவதற்கு இதுபோன்ற பணிகளில் ஈடுபடுகிறீர்கள்.

இந்த திட்டம் முறையாக செயல்பட அமைத்ததை போல் தெரிய வில்லை. ஆற்றுக்குள் அமைத்திருப்பவை சுத்திகரிப்பு நிலையமே கிடையாது.

பாதாள சாக்கடை திட்டம் முடிவடையும் வரை எந்த முறையில் கழிவு நீர் சுத்திகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் சல்ஜாப்பு தெரிவித்தனர்.

இதனால் கடுப்படைந்த நீதிபதிகள்,  கோர்ட்டில் வந்து பதில் சொல்வது போல் சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள்.

களத்திற்கு நாங்கள் நேரடியாக வந்து விட்டோம். ஆய்வு செய்து வருகிறோம்.

ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் பழைய முறையை ஏன் இன்னும் பயன்படுத்துகிறீர்கள்.

நவீன தொழில்நுட்பம் எப்போது பயன்படுத்தப்படும் என்று கேள்வி எழுப்பி அதிகாரிகளை கடிந்து கொண்டனர்.

முன்னதாக மனுதாரரின் வக்கீல் அருள், நீதிபதிகள் வருகையையொட்டி மாநகராட்சி செய்துள்ள தற்காலிக நடவடிக்கைகள் குறித்தும், நிரந்தர தீர்வு காண செய்ய வேண்டியவை குறித்தும் நீதிபதிகளுக்கு எடுத்துக்கூறினார்.

ஆணையாளர் சுகபுத்ரா, தற்போது மேற்கொள்ளப்படும் கழிவுநீர் சுத்திகரிப்பு பணி மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களின் அடுத்தகட்ட மேம்பாடுகள், அதன் மூலம் ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க முடியும் என்று விளக்கம் அளித்தார்.

ஆய்வின்போது நீதிபதிகளுடன் ராபர்ட் புரூஸ் எம்.பி., அரசு கூடுதல் தலைமை வக்கீல் வீரகதிரவன், வக்கீல்கள் ஆயிரம் செல்வகுமார், அருள், மனுதாரர் முத்தாலங்குறிச்சி காமராசு ஆகியோரும் சென்றனர்.

மேலும் ராமையன்பட்டி மாநகராட்சி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஆய்வு செய்தபோது நீதிபதிகள், அருகில் உள்ள பகுதியையும் பார்வையிட்டனர். அங்கு நாலாபுறமும் சீமைக்கருவேல மரங்கள் மட்டுமே நின்றிருந்தன. மேலும் அந்த பகுதியில் ஒரு பறவை கூட காணப்படவில்லை.

இதையடுத்து பெரிய நீர்த்தேக்கமாகவும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வெளியேறும் பகுதியாக உள்ள இங்கு ஏன் பறவைகள் காணப்படவில்லை. பறவைகள் எங்கே? என்று அதிகாரிகளிடம் கேட்டனர்.

அப்போது அவர்கள், அதிகாரிகள் கூட்டம் அதிகமாக வந்திருப்பதால் கலைந்து சென்றிருக்கும் என்று பதில் அளித்தனர். ஆனால் நீதிபதிகள், “இது பறவைகள் வராத சுற்றுச்சூழல் இடமாக மாறி விட்டதையே இது காட்டுகிறது” என்றனர்.

ஆய்வை முடித்து நீதிபதிகள் புறப்படும்போது, ராமையன்பட்டி ஊராட்சி வேளாங்கண்ணி நகர் பகுதி மக்கள் நீதிபதிகளின் வாகனத்தை வழிமறித்து, தங்களது பகுதியில் செயல்படும் சுத்திகரிப்பு நிலையத்தால் துர்நாற்றம் வீசுவதுடன், பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறி மனு அளித்தனர்.

இறுதியாக குறுக்குத்துறை முருகன் கோவில் அருகே ஆற்றில் கழிவுநீர் கலக்கும் இடங்களையும் நீதிபதிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் வண்ணார்பேட்டை சுற்றுலா மாளிகையில் நீதிபதிகள்,  அங்கு ஆட்சியர் கார்த்திகேயன், மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா மற்றும் பொதுப்பணித்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோருடன், தாமிரபரணி நதியில் கழிவுநீர் கழிப்பதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டனர். தொடர்ந்து, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை, சத்திரம் புதுக்குளம், குறுக்குத்துறை முருகன் கோயில் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆய்வு நடத்தும் நிலையில், தற்காலிகமாக அனைத்து இடங்களும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டினர்.

இதனால் கோபமடைந்த நீதிபதிகள், “யாரை ஏமாற்றுவதற்கு இதுபோன்று செயல்படுகிறீர்கள்? முறையாக என்ன திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது?” என்று கேள்வி எழுப்பி, மாநகராட்சி அதிகாரிகளை கடிந்து கொண்டனர். மாநகராட்சி ஆணையாளர் சுகபுத்ரா, நீதிபதிகளிடம் விளக்கம் அளித்தார்.

இதையடுத்து “தாமிரபரணி நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை முழுமையாக நிறைவேற்றத் தேவைப்படும் நிதி ஒதுக்கீடு, கால அளவு ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு செயல் திட்டத்தை ஒரு வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நெல்லை ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இது தொடர்பாக நீதிமன்றத்தால் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும், தாமிரபரணியைப் பாதுகாப்பதற்கான பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்” எனவும் தெரிவித்தனர்.