சென்னை: புதுச்சேரி மாநிலத்துக்கு தனி கல்வி வாரியும் அமைப்பது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுங்கள் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

தமிழக கல்வித்திட்டத் திட்டத்தினையே அண்டை மாநிலமான புதுச்சேரி மாநிலமும் கடைபிடித்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களில் ஒரே வகையிலான பாடத்திட்டம், தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரிக்கு என தனி கல்வி வாரியம் அமைக்க கோரி ஸ்ரீதர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது, புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றும்,  குறிப்பாக 10, 12ஆம் வகுப்புகளுக்கு என தனி பாட திட்டத்தை வகுக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து,  புதுச்சேரியில் பள்ளி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தனி கல்வி வாரியம் அமைப்பது மாணவர்களின் நலனுக்கு சிறப்பானதாக இருக்கும் என்ற போதும், இதுதொடர்பாக அரசு அலுவலர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என கூறியது.

மேலும், இதுதொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை செயலாளருக்கு 4 வாரத்துக்குள் மனுவை அளிக்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், யூனியன் பிரதேசத்தில் அதிகரித்துள்ள பள்ளிகள் எண்ணிக்கை, தனிப்பட்ட பாடத் திட்டம் வழங்குவதின் தேவை ஆகியவற்றை பரிசீலித்து, 12 வாரங்களில் தகுந்த முடிவை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்,  மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு புதுச்சேரி அரசு, விரைந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.