சென்னை:  அரசு சேவை இல்லங்கள், குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க தமிழ்நாடு அரசு 1.12 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் சமீப காலமாக அதிர்ச்சியூட்டும்  பாலியல் விவகாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவியர் விடுதி மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை சென்ற பெயரில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியையின் மகனான டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல தனியார் பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், அதுபோல பல தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நிலையில்,   அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வழங்க 1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் உள்ள அரசு சேவை இல்லங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதை செயல்படுத்த 1.12 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதன்படி, மொத்தம் 1400 மாணவிகளுக்கு காரத்தே மற்றும் சிலம்பம் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

மேலும் பயிற்றுநர்களை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்டை குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சியை வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட சமூக நல அலுவலர் தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட விளையாட்டு அலுவலர், மைய கண்காணிப்பாளர் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.