டில்லி

நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கோரி சீமான் தொடுத்த வழக்கை டில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என டில்லி உயர்நீதிமன்றத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மனுத் தாக்கல் செய்தார்.

கடந்த 1 ஆம் தேதி இந்த மனுவைப் பொறுப்பு தலைமை நீதிபதி மன்மோகன், நீதிபதி மன்மீத் ப்ரீதம் சிங் அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.  விசாரணையின் போது அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட டில்லி உயர்நீதிமன்றம் இந்த மனு மீதான தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

நேற்று இந்த வழக்கு தொடர்பாக வெளியிட்டுள்ள தீர்ப்பில்,

‘தேர்தல் ஆணையம் பாரதீய பிரஜா ஐக்யதா கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது தன்னிச்சையானதோ, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானதோ இல்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலில் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தாக்கல் செய்த ரிட் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ 

என்று கூறப்பட்டிருந்தது.

இன்று இந்த உத்தரவுக்கு எதிராகச் சீமான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிய வந்துள்ளது.