கர்நாடகா மாநிலம் மண்டியாவில் உள்ள கட்டிகேரி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியரை மாணவிகள் விளக்குமாறு மற்றும் கட்டையை வைத்து தாக்கியுள்ளனர்.

நேற்று மாலை நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து கே.ஆர்.எஸ். காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

கட்டிகேரி கிராமத்தில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சின்மயானந்தா மீது மாணவிகள் அடுக்கடுக்கான புகார்களை அளித்துள்ளனர்.

மாலை நேரங்களில் மாணவிகள் விடுதிக்கு வரும் தலைமை ஆசிரியர் அங்குள்ள அறைக்கு மாணவிகளை தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், செல்போனில் ஆபாச படங்களைக் காட்டி மாணவிகளிடம் தகாத முறையில் நடப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

நேற்றும் அதேபோல் மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை அடுத்து அந்த மாணவி கூக்குரல் இட்டதை அடுத்து விடுதியில் இருந்த மாணவிகள் அனைவரும் ஒன்று திரண்டு தலைமை ஆசிரியரை துடைப்பம் மற்றும் கையில் கிடைத்த கட்டை முதலியவற்றை கொண்ட தாக்கியுள்ளனர்.

பின்னர் விடுதி வார்டன் அளித்த புகாரை அடுத்து காவல்துறையினர் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.