டெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை  உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. இந்த வழக்கு மீதான விசாரணை தினந்தோறும்  நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தது. இதனால், அங்கு பயங்கரவாதம் தலைதூக்கியது. இந்த நிலையில், மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்டு 6ந்தேதி  ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டு, பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பல்வேறு வழக்குகள்  உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை கடந்த (ஜுலை 2024)  மாதம் 11-ந்தேதி உச்சநீதிமன்றம்  விசாரித்தது. அப்போது, அனைத்து மனுதாரர்களும் தங்களுடைய எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்ய  உத்தரவிட்டது. மேலும்,  வழக்கு தொடர்பான ஆவணங்களை ஜூலை 27-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் மனுதாக்கல் செய்ய முடியாது என இறுதிக்கெடு விதித்தது. இந்த மனுக்களை தயார் செய்து விசாரணைக்கு தாக்கல் செய்யும் வகையில் மனுதாக்கல் செய்பவர்கள் சார்பில் ஒரு வழக்கறிஞரையும், அரசு சார்பில் ஒரு வழக்கறிஞரையும் நியமித்தது.

இதைத்தொடர்ந்து,  சட்டப்பிரிவு 370 ரத்துக்கு எதிராக வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான சஞ்சய் கிஷன் கவுல், சஞ்ஜிவ் கண்ணா, பி.ஆர். கவாய், சூர்ய காந்த் நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை விசாரிக்கிறது. இன்று முதல் உச்சநீதிமன்ற வேலை நாட்களில் தினந்தோறும் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.