டெல்லி

மிழக அரசு வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் இயக்க விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது.

தமிழக மோட்டர் வாகன சட்டப்படி தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகளே இயக்க அனுமதி உள்ளது. பல ஆம்னி பேருந்து நிறுவனங்கள் தமிழ்நாட்டின்அண்டை மாநிலங்களிலும், பிற வெளிமாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பேருந்துகளை இங்கு இயக்கி வருவதால் தமிழக அரசுக்கும், போக்குவரத்து துறைக்கும் கிடைக்க வேண்டிய வருமானம் மற்றும் சாலை வரியில் சிக்கல் ஏற்படுகிறது.

எனவே வெளிமாநில ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதற்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டிருந்தது. கடந்த 18-ம் தேதி வரை ஆம்னி பேருந்துகள் இயக்க அவகாசம் வழங்கப்பட்டது. இந்த கால அவகாசம் முடிந்த நிலையில் விதியை மீறி இயங்கிவரும் பேருந்துகளை போக்குவரத்து அதிகாரிகள் பிடித்து வருகின்றனர்.

தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று  உச்சநீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றம், “அகில இந்திய சுற்றுலா பெர்மிட் பெற்றிருந்தால் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயக்குவதை தமிழக அதிகாரிகள் தடுக்கக்கூடாது” என்று உத்தரவிட்டது.

மேலும் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்ததோடு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.