டில்லி

த்திய அரசு 70 கொலிஜிய சிபாரிசுகளை நிலுவையில் வைத்துள்ளதால் உச்சநீதிமன்றம் அதிருப்தி அடைந்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ‘கொலீஜியம்’ அமைப்பு, நீதிபதிகளைத் தேர்வு செய்து மத்திய அரசுக்குச் சிபாரிசு செய்கிறது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்கத் தாமதம் செய்வதாக அடிக்கடி உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து வருகிறது. நேற்று நீதிபதிகள் நியமன ஒப்புதலுக்கான காலவரையறையைப் பின்பற்றாததற்காக, மத்திய அரசு மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.

விசாரணையின் போது, ”நீதிபதிகள் நியமனம் தொடர்பாக ‘கொலீஜியம்’ முன்வைத்த 70 சிபாரிசுகள், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து நிலுவையில் உள்ளன” என்று நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுதன்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசு மீது அதிருப்தி தெரிவித்தது.

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி, இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசித்து பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் கேட்டார்.

நீதிபதி எஸ்.கே.கவுல்,

”உங்கள் பதவியைப் பயன்படுத்தி, இதற்குத் தீர்வு காணுங்கள். நீங்கள் குறுகிய கால அவகாசம் கேட்டதால், இன்று நான் அமைதியாக இருக்கிறேன். அடுத்த தடவை அமைதியாக இருக்க மாட்டேன்’ அக்டோபர் 9 ஆம் தேதிக்கு அடுத்த கட்ட விசாரணையை ஒத்தி வைக்கிறேன்”

என்று தெரிவித்தார்.