34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத் சிங் சித்து இருந்த போது 1988 ம் ஆண்டு டிசம்பர் 27 அன்று பாட்டியாலா சாலையில் நடைபெற்ற வாக்குவாதத்தில் 65 வயதான குர்நாம் சிங் என்பவரை தலையில் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சித்து மீது தொடரப்பட்ட வழக்கில் பாட்டியாலா செசன்ஸ் நீதிமன்றம் சித்து தாக்கியதால் தான் குர்நாம் சிங் இறந்தார் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி 1999 ம் ஆண்டு சித்துவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது.

இதன் மீது மேல்முறையீடு செய்யப்பட்டதில் சித்துவுக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை வழங்கி பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் 2007 ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

சித்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில் சிந்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர் மற்றும் சஞ்ஜய் கிஷன் கவுல் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை அடுத்து சித்து உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.