டில்லி

ண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை இந்தியா கூட்டணி இணைந்து எதிர்கொண்டது. மேலும் பாஜகவும் வேட்பாளரை நிறுத்தியது. தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மனோஜ் சோன்கர் மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.

தேர்தலில் மொத்தம் 36 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதில் பா.ஜ.க.வுக்கு 16 வாக்குகளும் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகளும் கிடைத்தன. ஆயினும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு கிடைத்த வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டதால் பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாகத் தேர்தல் நடத்தும் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து பஞ்சாப் – அரியானா உயர்நீதிமன்றத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக வழக்கு தொடரப்பட்டு பா.ஜ.க வேட்பாளரின் வெற்றிக்கு ஆம் ஆத்மி இடைக்கால தடை கோரியது. நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்தது  ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் அதிகாரி ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கண்டித்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாளை பிற்பகலுக்குள் சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குச்சீட்டுகளைச் சமர்ப்பிக்கவும் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவைச் சமர்ப்பிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சண்டிகரில் நடைபெறும் குதிரை பேரம் குறித்து தாங்கள் கவலைப்படுவதாகவும் புதியதாகத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.