டெல்லி: சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் தாயார் தொடர்ந்த வழக்கில், அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் பிரபல யுடியூபரான சவுக்கு சங்கர்.  திமுக ஆட்சியில் நடைபெற்று வரும் ஊழல், குடும்பத்தினரின் தொழில் வணிகம் மட்டுமின்றி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உள்பட பல்வேறு தகவல்களை வெளியிட்டு தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவர்மீது ஏராளமான அவதூறு வழக்குகளை தமிழ்நாடு அரசு பதிவு செய்தது. இதற்கிடையில், பெண் காவலர் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக கூறிய புகாரில் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்மீது கஞ்சா வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் அடுத்தடுத்து பாய்ந்தது.

இதன் காரணமாக,  சவுக்கு  சங்கர், கடந்த மே 4ஆம் தேதி கோவை போலீசாரால் தேனியில்  நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.  இதையடுத்து அவர்மீது தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் குண்டாசை போட்டுள்ளார். அப்போதைய சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிரின் பேரில், மே 12 அன்று  சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவில் மட்டும் ஏழு வழக்குகள் உள்ளன. அவற்றில் 3 வழக்குகள் மீது விசாரணை நடத்தப்படுகிறது. இரண்டு வழக்குகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதனிடையே, சவுக்கு சங்கரின் தாயார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கு எதிராகவும், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள ஆட்கொண்டர்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கவும் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில்  நீதிபதிகள் சுதான்சு துலியா மற்றும் அஷானுதீன் அமானுல்லா ஆர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கில் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தனர். அதேநேரம், வேறு வழக்குகளில் மனுதாரர் சிறையில் இருந்தால், அதனை இந்த உத்தரவு பாதிக்காது எனவும் நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியது.

முன்னதாக, தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா, சவுக்கு சங்கர் ஏன் கைது செய்யப்பட்டார் என விளக்கி அதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.  இதனையடுத்து, சவுக்கு சங்கரின் தாயார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, “குற்ற வழக்குகளில் வெளியில் வந்துவிடுவார் என்பதற்காகவே சவுக்கு சங்கர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்” என வாதிட்டார் .

இதையடுத்து, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவுக்கு எதிராக அவரது தாயார் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றமே விசாரிக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தது. மேலும்,  ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து, மனு தள்ளுபடி செய்யப்பட்டது.   தடுப்பு காவல் ஆணைக்கு எதிரான அவரது தாயாரின் மனுவை விசாரித்து முடிக்கும் வரை இடைக்கால ஜாமின்  வழங்கி  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.