ரியாத்

ராபிய இளைஞர்களிடையே சிறு சிறு காரணங்களுக்கு எல்லாம் மனைவியை விவாகரத்து செய்யும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

அரேபிய இளைஞர்களிடையே விவாகரத்து தற்போது அதிகரித்து வருகிறது.  அதில் சவுதி அரேபியாவில் அதிக விவாகரத்துக்கள் அற்பக் காரணங்களுக்காக இளைஞர்களால் மனைவிக்கு கொடுக்கப்படுகின்றன.  இது குறித்து கவலை தெரிவித்துள்ள அரேபிய நாடுகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் இளைஞர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவது அவசியமான ஒன்று எனக் கூறுகின்றனர்.

ஒரு இளைஞன் தன் மனைவியை தனக்கு பின்னால் தான் நடந்து வர வேண்டும் எனவும் எப்போதும் முன்னால் செல்லக் கூடாது எனவும் பலமுறை கூறி உள்ளார்.  ஆனால் அவர் மனைவி சில சமயங்களில் இவரை விட வேகமாக நடந்து சற்று முன்னால் சென்றுள்ளார்.  இதைக் காரணம் காட்டி மனைவியை இந்த இளைஞர் விவாகரத்து செய்துள்ளார்.

அதே போல தேனிலவின் போது தனக்கு பெண்கள் காலில் வளையம் அணிந்துக் கொள்வது பிடிக்காது (அதாவது நம் ஊர் கொலுசு போல ஒரு ஆபரணம்) என கணவன் கூறியிருக்கிறார்..   ஆனால் மனைவி அதை  கேளாமல் மனைவி கொலுசு அணிந்திருக்கிறார்.  அதற்காக அந்த கணவர் தன் மனைவியை விவாகரத்து செய்துள்ளார்

ஒரு கணவன் தனது மனைவியுடன் நண்பர்களுக்கு விருந்து அளித்துள்ளார்.   அனைத்து உணவு வகைகளையும் பரிமாறிய மனைவி தலைக்கறியை பரிமாற மறந்து விட்டார்.  கணவனின் கண்ணோட்டத்தின் படி மனைவி தன் நண்பர்கள் மத்தியில் தன்னை அவமானப்படுத்தவே அவ்வாறு செய்துள்ளார் என தோன்றி உள்ளது.  விருந்தினர் அனைவரும் சென்றவுடன் மனைவியுடன் கடும் சண்டையிட்டு, அவரை விவாகரத்தும் செய்துள்ளார்.

திருமண பதிவாளரான ஹமூத் அல் ஷிமாரி, “மேலே காண்பவைகளைப் போல மேலும் மேலும் அற்பக்காரணங்களுக்காக விவாகரத்து வழங்கப்படுவது அதிகரித்து வருகிறது.  இது முழுக்க முழுக்க மேலை நாட்டு நாகரிகத்தின் தாக்கத்தினால் தான் உண்டாகிறது” எனக் கூறுகிறார்.

சவுதி அரேபியாவின் சமூக ஆர்வலர்களில் ஒருவரான லதீஃபா அகமது இது பற்றி, “குடும்ப அமைப்பைப் பற்றி பெற்றோர்கள் இக்கால இளைஞர்களுக்கு கற்பிக்க வேண்டும்.  இளஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் திருமணத்தின் முன்பே சமூக மற்றும் மத ஆர்வலர்கள் இவற்றை விளக்கி இது போல விவாகரத்துக்களை குறைக்க ஆவன செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.