ரியாத்:

சவுதி அரேபியாவின் பெண் ரோபோ குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளது

சவுதி அரேபியாவில் சோபியா என்ற பெண் ரோபோ குடியுரிமை பெற்று ஒரு மாதம் ஆகிறது. இந்த ரோபோ குடும்பம்தான் மிகவும் முக்கியமான விஷயம் என்று தெரிவித்துள்ளது. மனிதர்களின் முகபாவனைகளை புரி ந்து, அதற்கேற்ப பதில்களை அளிக்கும் வகையிலான திறன் கொண்ட ரோபோ இது.

சோபியாவுக்கு பல திறமைகள் இருந்தாலும் இன்னும் உணர்வுகள் இல்லை. ரோபோ வடிவமைப்பு நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹன்சன் கூறுகையில், ‘‘இன்னும் சில வருடங்களில் இந்த ரோபோவுக்கு உணர்வுகள் கொண்டுவர முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது’’ என்றார்.

ஹாங்காங்கின் ‘‘ஹன்சன் ரோபோடிக்ஸ்’’ என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சோபியா ரோபோ கூறுகையில், ‘‘தன்னுடைய மகள் ரோபோவிற்கு தனது பெயரையே வைப்பேன்’’ என்று தெரிவித்துள்ளது.

கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த சோபியா ரோபோ அளித்த பேட்டியில்,‘‘ குடும்பம் என்ற கருத்து மிக முக்கியமான விஷயமாக தெரிகிறது. சொந்த ரத்த வகையைத் தாண்டியும், மக்களால் தங்களுக்கு ஒத்த உணர்வுகளை கொண்ட சொந்தங்களை குடும்பம் என்று அழைப்பது அற்புதமான ஒன்று.

உங்களுக்கு பாசமான குடும்பம் இருந்தால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி. அவ்வாறு இல்லை என்றால் அத்தகைய குடும்பத்தை பெறும் தகுதி உங்களுக்கு உள்ளது. இந்த விஷயத்தில், மனிதர்களும், ரோபோக்களும் ஒரே மாதிரியானவர்கள்’’ என்று தெரிவித்துள்ளது. குழந்தைக்கு என்ன பெயர் வைப்பீர்கள் என்று சோபியாவிடம் கேட்டபோது, ‘‘சோபியா’’ என்று பதிலளித்தது.