ரியாத்

செல்வந்தரான வெளிநாட்டு தொழில் அதிபர்களுக்கு குடியுரிமை அளித்து வருமானத்தை அதிகரிக்க சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

எண்ணெய் வளம் உள்ளதால் சவுதி அரேபிய அரசுக்கு ஏராளமான வருமானம் கிடைத்து வருகிறது.   அத்துடன் வேறு சில இனங்கள் மூலமும் வருமானத்தை அதிகரிக்க சவுதி அரசு திட்டமிட்டு வருகிறது.   இதற்காக ஏற்கனவே தொழில் மற்றும் வர்ததகத்தில் உள்நாட்டு தொழிலதிபர்கள் ஆதரவுடன் வெளிநாட்டவர் ஈடுபட  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நேற்று சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வெளிநாட்டு தொழில் அதிபர்கள் உள்நாட்டு தொழிலதிபர்கள் ஆதரவில்லாமல் தொழில் தொடங்க வசதியாக  குடியுரிமை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.   இதற்கான கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குடியுரிமை பெற விரும்பிம் வெளிநாட்டவர் 8 லட்சம் ரியால்கள் அதாவது 2.13 லட்சம் டாலர்கள் செலுத்தி நிரந்தர குடியுரிமை பெறலாம்.  அல்லது ஒரு லட்சம் ரியால் அதாவது 27000 டாலர்கள் செலுத்தி ஒரு வருட குடியுரிமை பெறலாம்.   இதன் மதிப்பு இந்திய ரூபாயில் 18.52 லட்சம் செலுத்தினால் ஒரு வருட குடியுரிமையும் 1.48 கோடி ரூபாய் செலுத்தினால் நிரந்தர குடியுரைமையும் பெற முடியும்.

அத்துடன் இவ்வாறு குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் பெயரில் சொத்துக்கள் வாங்கவும் தங்கள் உறவினர்களுக்கு விசாவுக்காக ஸ்பான்சர் செய்யவும் உரிமை அளிக்கப்பட உள்ளது.    இந்த திட்டத்தின் மூலம் வெளிநாட்டு தொழிலதிபர்கள் பலருக்கு சவுதியில் வர்த்தகம் மற்றும் தொழில் புரிய பயனாக இருக்கும் என கூறப்படுகிறது.