சென்னை: திமுக அரசின் தனியார் மயத்தை எதிர்த்து பல மாதங்களாக போராடி வரும் தூய்மை பணியாளர்கள் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்களால் முடியல…நாங்கள் செத்துபோறோம் என்று கண்ணீர் மல்க கூறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை மெரினாவில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கண்ணீர் மல்க போராட்டம் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். அப்போது பெண்கள் பலர் கண்ணீர் விட்டு கதறினர். எங்கள கொல பண்ண சொல்லுங்க; செத்து போறோம்.. பசியோடு இருக்க முடியாது” என்று கதறினர். ஆனால், காவல்துறையினர் அதை கண்டுகொள்ளாமல், அவர்களை இழுத்துச்சென்று பேருந்தில் ஏற்றி அழைத்து சென்று அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.
இந்த போராட்டம் காரணமாக கடற்கரை காமராஜர் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
முன்னதாக, சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மற்றும் திரு.வி.க.நகர் 5, 6-ஆம் மண்டலங்களில் தூய்மைப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டதை அறிந்ததும், அந்த மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தனியார்மயமாக்கம் செய்யப்பட்டால், பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்கு வேலை பாதிப்பு ஏற்படும், சம்பளம் குறையக்கூடும் என்பதால் அவர்கள் இந்த முடிவை ஏற்க மறுத்தனர்.
இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பாக திரண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர். ஆரம்ப நாட்களில் அவர்கள் அமைதியான முறையில் அமர்ந்து போராடினர். ஆனால், பல நாட்கள் கடந்தும் மாநகராட்சி எவ்வித பதிலும் அளிக்காததால், போராட்டம் தீவிரமடைந்தது.
பின்னர்,நீதிமன்ற உத்தரவின் பேரில், ஆகஸ்ட் 13-ஆம் தேதி நள்ளிரவில் , போராட்டக்காரர்கள் மாநகராட்சி கட்டிடம் நுழைவாயிலில் அமர்ந்து தடுத்ததால், போலீசார் தலையிட்டு பலரை கைது செய்தனர். அதன்பின்னரும், அவர்கள் சென்னையின் பல பகுதிகளில் திடீர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்; ஒவ்வொரு முறையும் போலீசார் அவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மெரினா கடற்கரையில் இறங்கிய தூய்மைப் பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது கடலில் நின்றபடி கைபதாகைகள் ஏந்தி, ஆபத்தான சூழலில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது கண்ணீர்மல்க கூறிய தூய்மை பணியாளர்கள், “கடந்த 120 நாட்களாக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி ஆணையர் — யாரையும் எங்களது கோரிக்கைகள் சென்றடைவதில்லை. எங்களது பிரச்சினையை கேட்க யாருக்கும் விருப்பமில்லாத நிலை,” எனக் குற்றம்சாட்டினர்.
தூய்மை பணியாளர்கள், கடந்த 5 மாதங்களாக தங்களது போராட்டத்தை தொடர்கின்றனர். வேலை பாதுகாப்பு, பழைய நியமன முறையைப் பாதுகாக்க வேண்டும், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும், பணியாளர்கள் திருப்தியடையும் தீர்வு இன்னும் எட்டப்படாததால் நிலைமை நீடித்து வருகிறது.
கலைஞர் நினைவிடத்தில் மீண்டும் தூய்மைபணியாளர்கள் போராட்டம்
இந்த சூழலில் இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் அருகே, தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்களின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனக் கூறி தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தொடர்ந்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பேருந்தில் ஏற்றி அருகிலுள்ள மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். கைது செய்யும் நேரத்தில், போலீசார் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் இடையே சிறிய வாக்குவாதமும் ஏற்பட்டது. இதற்கிடையில், காமராஜர் சாலையின் பல பகுதிகளில், 30 பேர் வரை கொண்ட குழுக்களாக தூய்மைப் பணியாளர்கள் தனித்தனியாக திடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த போராட்டத்தால் காமராஜர் சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.