சென்னை: ‘நீட்’  தேர்வு பயம் காரணமாக, சேலத்தில் மாணவி ஒருவர் தற்கொலையை செய்துகொண்ட நிலையில்,  நீட் தேர்வுக்கு முடிவு கட்ட வேண்டும் என்றும்,   மாணவர்களை கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் ஒன்றிய அரசு ரத்துசெய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வு பயத்தில் தமிழ்நாட்டில் அவ்வப்போது மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொள்வது வழக்கமாக உள்ளது. இதை தடுக்க அரசே இலவசமாக நீட் பயிற்சி வழங்கி வந்தாலும், பெற்றோர்களின் வற்புறுத்தல் மற்றும் நீட் தேர்வு பயணம் காரணமாக சிலர் தற்கொலை முடிவை நாடுகின்றனர். இதனால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்தியஅரசும், உச்சநீதி மன்றமும் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், இன்று சேலம் அருகே நீட் தேர்வுக்காக படித்து வந்த மாணவி ஒருவர், தேர்வு பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள பெரிய முத்தியம்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி செல்வராஜ், சந்திரா தம்பதியின் மகள் சத்யா நீட் தேர்வு அச்சத்தால் மார்ச் 31ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சேலம் மாணவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில்,   சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்  வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பெரிய முத்தையம்பட்டியைச் சேர்ந்த மாணவி நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியாது என்ற அச்சம் காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி ஏற்கனவே 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், நீட் தேர்வையும் எழுதியுள்ளார். அதில் போதிய மதிப்பெண்கள் கிடைக்காத நிலையில் மீண்டும் நீட் தேர்வு எழுது வதற்காக சேலம் ஜலகண்டாபுரத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளார். நீட் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், இம்முறையும் தம்மால் அதிக மதிப்பெண் பெற முடியாதோ என்ற அச்சத்தில் கடந்த 31-ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி நேற்று உயிரிழந்திருக்கிறார்.

நீட் தேர்வு மருத்துவப் படிப்பை ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாற்றுகிறது என்பது மட்டுமின்றி, அவர்களின் தன்னம்பிக்கையையும் சிதைக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்ததற்கு இது தான் காரணம் ஆகும். நடப்பாண்டில் மட்டும் கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி முதல் நேற்று வரையிலான ஒரு மாதத்தில் 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மானவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அதனால் ஏற்பட்ட பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவோ, மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவோ நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை உனர்ந்து அதை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கும்.

ஆனால், மத்திய அரசு அத்தகைய ஆய்வு எதையும் மேற்கொள்ளவில்லை. அதேபோல், தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அதன் மீது தொடர் நடவடிக்கை எடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய முயற்சி செய்யவில்லை.

நுழைவுத்தேர்வுகள் மாணவர்களின் உயர்வுக்கு வகை செய்ய வேண்டும். மாறாக மாணவர்களின் உயிர்களை பறிப்பதாக இருக்கக்கூடாது. மாணவர்களைக் கொல்லும் நீட் தேர்வை இனியும் தாமதிக்காமல் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். தற்கொலை செய்து கொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதே நேரத்தில், கல்வியை விட உயிர் பெரிது என்பதை உணர்ந்து தற்கொலை முயற்சிகளை மாணவச் செல்வங்கள் கைவிட வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளார்.