திருவனந்தபுரம்: ஆவணி மாதப்பிறப்பையொட்டி, இன்று மாலை 5மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்குப் பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதையொட்டி கார்த்திகை மாதம் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அப்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து அய்யப்பனை தரிசனம் செய்வார்கள்.

இதுமட்டுமின்றி ஒவ்வொரு மாதப்பிறப்பின்போதும் 5 நாட்கள் கோவில் நடைதிறந்து பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி,  தமிழ் மாதமான ஆடி மாதம் முடிந்து நாளை ஆவணி மாதம் பிறக்கிறது.  இதையொட்டி, கோவிலில் வழக்கமான பூஜைகளுக்காக இன்று , சபரிமலை கோயில் நடை இமாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

மாதந்திர பூஜைகளுக்காக இன்று திறக்கப்படும் நடை, ஆக.21-ம் தேதி வரை திறந்திருக்கும். பக்தர்கள் ஆன்லைன் மூலம் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.