மாஸ்கோ: மக்களை பாதித்து வரும் கொரோனா பெருந்தொற்று வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் பரவுவதை தடுக்கும் வகையில், ரஷியாவில்,  செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. மக்களுக்கு  இதுவரை முழுமையாக தடுப்பூசி செலுத்தப்படுவது முழுமை அடையாத நிலையில், வளர்ப்பு பிராணிகளுக்கு தடுப்பூசி போடும்  பணி தொடங்கி நடந்து வருகிறது.

உலக நாடுகளை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மிரட்டி வரும் கொரோனா தொற்று, தற்போது விலங்குகளுக்கும் பரவுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவது கண்டுபுடிக்கப்பட்ட உள்ளது. இந்தியாவிலும் விலங்குகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சமீபத்தில், ஐதராபாத் மற்றும் உத்தர பிரதேசங்களில்  உள்ள உயிரியல் பூங்காவில் 8 ஆசிய சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.

கொரோனா  வவ்வால் மூலம் பரவியதாகவும் விலங்குகள் மூலம் பரவியதாகவும் தொடக்க காலத்தில் தகவல்கள் பரவி வந்தன. தற்போது அதை உறுதி செய்யும் வகையில் விலங்குகளும் பாதிக்கப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பலர், தங்களிடம் இருந்த வளர்ப்பு பிரானிகளை தவிர்க்கும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு எதிராக பல சமூக ஆர்வலர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் நல அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.  ஆனால், இதுவரை விலங்குகளிடம் இருந்து கொரோனா தொற்று மனிதர்களுக்கு பரவியதற்கான  எந்தவொரு ஆதரமும் இல்லை.

இந்த நிலையில்,  ரஷ்யாவில் தங்களுடைய செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் ஆர்வமுடன் உள்ளனர்.  இதனை முன்னிட்டு ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யாவின் கால்நடை கண்காணிப்புக் குழுவான ரோசல்கோஸ்னாட்ஸர் ,  மார்ச் மாதத்தில், விலங்களுக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறியப்பட்டது என்றும்,  இதனால், அவைகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளது என்று கூறினார். மேலும் நாட்டின் பல பிராந்தியங்களில் உள்ள கால்நடை கிளினிக்குகளில் தடுப்பூசிகள் போடும் பணி தொடங்கியுள்ளன என்று உள்ளூர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.