புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகராக விளங்கியவரும் அரசியல் பிரமுகருமான அர்னால்ட், குறித்து அதிர்ச்சிகரமான பதிவு ஒன்று சமூகவலைதளங்களில் உலவுகிறது.

அந்த பதிவு:

“நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார், அர்னால்டு. (Arnold Schwarzenegger)

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் “அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்” என்று அறிவித்தார்

நாட்கள் நகர்ந்தன …

பதவி போனது ..

புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது

ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி “அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்”

மனமுடைந்த அர்னால்ட், தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார்

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

“நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்”

“உங்கள் புகழை,
உங்கள் பதவியை,
உங்கள் அதிகாரத்தை,
உங்கள் அறிவை ஒரு போதும் நம்பாதீர்கள்”

“இது எதுவுமே நிரந்தரம் கிடையாது”

*இவ்வுலகை படைத்த இறைவன் மட்டுமே என்றும் நிரந்தரம்…..” என்கிறது அந்த பதிவு.

ஆனால், வெளிநாடுகள் பலவற்றுக்குச்  சென்று வந்துள்ள கா.திருத்தணிகாசலம், இதை மறுத்து முகநூலில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு:

“அந்த செய்தியின் உண்மைத்தன்மை அறியாமல் எல்லோரும் பரப்புகிறார்கள்

அர்னால்ட் தற்போதும் புகழோடுதான் இருக்கிறார்

வெளிநாடுகளில் பெரும்பாலான ஓட்டல்கள் முன்பதிவு செய்யாமல் தங்க முடியாது

அதைப்போன்றே வெட்டவெளியில் தூங்கமுடியாது சிலநேரம் மைனசில் குளிர் இருக்கும்

வதந்தியை கற்பனை செய்து எழுதுவோருக்கு அடிப்படை அறிவுகூடவா இருக்காது?”

–     ஹூம்.. என்னத்தைச் சொல்ல.. கையில போன் இருந்தா ஏதாவது தட்டுவது வழக்கமாகிவிட்டது பலருக்கு!