சென்னை: சென்னையில், ரூ. 5,870 கோடி மதிப்பில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, 118.9 கி.மீ. தூரத்துக்கான மெட்ரோ ரயில் இயக்கி, பராமரிக்க ரூ. 5,870 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள மெட்ரோ ரயில் சேவை மேலும் பல கட்டங்களாக நீட்டிப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின்கீழ் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் மெட்ரோ வரை), வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை), வழித்தடம் 5 (மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூா் வரை) ஆகிய மூன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்புப் பணிமனைகள் உள்பட118.9 கி.மீ. நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில்,சென்னையில், ரூ. 5,870 கோடி மதிப்பில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தம் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகத்துக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.
இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் 2-ல் வழித்தடம் 3 (மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் II மெட்ரோ வரை), வழித்தடம் 4 (கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை) மற்றும் வழித்தடம் 5 (மாதவரம் பால்பண்ணை முதல் சோழிங்கநல்லூர் வரை) ஆகிய மூன்று வழித்தடங்கள் மற்றும் மாதவரம், பூந்தமல்லி மற்றும் செம்மஞ்சேரியில் உள்ள பராமரிப்பு பணிமனைகள் உட்பட 118.9 கி.மீ. நீளத்திற்கு இயக்கம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஏற்பு கடிதம் (Letter of Acceptance) டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ரூ. 5870 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பு கடிதத்தை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.எம்.ஏ.சித்திக் அவர்கள் டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர்.விகாஸ் குமார் அவர்களிடம் இன்று (02.04.2025) வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் நிதி இயக்குநர் திரு.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர். அமித் குமார் ஜெயின் (இயக்கம் மற்றும் சேவைகள்), சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மற்றும் டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர். ஒப்பந்தத்தின் கீழ் உள்ள பணியின் நோக்கம், இரண்டாம் கட்டத்தில் உள்ள 3 வழித்தடங்கள், மூன்று பராமரிப்பு பணிமனைகள் மற்றும் பயணிகளுக்கு சேவைகளை வழங்குதல் உட்பட இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பான அனைத்து பணிகளும் இதில் அடங்கும். இதற்கான ஒப்பந்த காலம், இரண்டாம் கட்டத்தில் பயணிகளின் சேவை தொடங்கும் தேதியிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும். டெல்லி மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பணிகள் திருப்திகரமாக இருப்பின் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டு உள்ளது.