சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த 30-4-2025 அன்று ஒரே நாளில் பதிவு துறையில், ஆவண பதிவு காரணமாக, ரூ. 272.32 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதை அமைச்சர் மூர்த்தி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

பதிவுதுறையில் வருவாயை பெருக்கும் நோக்கில் சுபமுகூர்த்த தினங்களில், கூடுதல் டோக்கன்கள் மற்றும் கூடுதல் நேரம் பணியாற்றி பதிவுகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, முகூர்த்த நாட்களில் ஏராளமான பத்திர பதிவுகள் நடைபெற்ற வருகின்றன.
இந்த நிலையில், சுபமுகூர்த்தநாளான ஏப்ரல் 30ந்தேதி (30-4-2025) புதன்கிழமை அன்று அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று 30.4.2025 அன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்கள் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்குபதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், 30-4-2025 அன்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.272.87 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இது, 2024-25 ம் நிதியாண்டில் கடந்த 10.2.2025 அன்று ஒரே நாளில் 23,421 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இதுவரையில் இல்லாத அளவில் அரசுக்கு ரூ.237.98 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. 2025-26 ம் நிதியாண்டில் இதற்கும் அதிகமாக 30-4-2025 அன்று ஒரே நாளில் 27,440 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது புதிய மைல் கல் என்று, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.