சென்னை: கும்மிடிப்பூண்டி, செங்குன்றத்தில் ரூ.1.88 கோடியில் சார்பதிவாளர் கட்டிடம் கட்டம் கட்டப்பட்டு உள்ளது. இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் வடசென்னை பதிவு மாவட்டம் – கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களில் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி வணிகவரி கோட்டம், மணப்பாறையில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில வரி அலுவலகக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

வடசென்னை பதிவு மாவட்டம் – கும்மிடிப்பூண்டி மற்றும் செங்குன்றம் ஆகிய இடங்களில் தலா 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மொத்தம் 1 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

மணப்பாறையில் மாநில வரி அலுவலக கட்டிடம்

மேலும், 2018-–19ஆம் ஆண்டிற்கான வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கையில், வணிகவரித்துறை அலுவலகங்களுக்கு வருகை தரும் வணிகப் பெருமக்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டடங்கள் கட்டுவது அரசின் நோக்கமாகும். அதன் அடிப்படையில், மணப்பாறையில் செயல்படும் மாநில வரி அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, திருச்சிராப்பள்ளி வணிகவரி கோட்டம், மணப்பாறையில் 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாநில வரி அலுவலகக் கட்டடத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

பதிவுத்துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான 14 பணியாளர்களின் வாரிசுதாரர்களில் 13 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் மற்றும் ஒரு நபருக்கு அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் பழனிசாமி இன்று 7 வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், மீன்வளம், பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், வணிகவரி ஆணையர், முதன்மைச் செயலாளர் எம்.ஏ. சித்திக், பதிவுத்துறைத் தலைவர் பொ. சங்கர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.